தலைமை செயலராக உள்ள வெ.இறையன்பு, ‛தான் எழுதிய நூல்களை எனக்காக பரிசளிக்க வேண்டாம்,' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக பள்ளிக்கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமை செயலராக பணியாற்றும் வரை எந்த திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என உத்தரவிட்டேன்.
எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை 2006ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன். இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது.
எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு உயர் அதிகாரி பதவியேற்றால் அவருக்கு கீழ் பணிபுரியும் மற்ற அதிகாரிகள், உயரதிகாரியை மகிழ்விப்பதாக எண்ணி, அவருக்கு பிடித்தமான ஒன்றை வாங்கி சென்று வாழ்த்து பெறுவதும், அவரை புகழ்ந்து பேசி, புழகாங்கிதம் அடைந்து சந்தோசப்படுவது வழக்கம். ஆனால், தற்போது பதவியேற்ற தலைமை செயலர் இறையன்பு இந்த வழக்கத்தை மாற்ற நினைப்பது பாராட்டத்தக்கது.
No comments:
Post a Comment