தினம் ஒரு தகவல் : அது என்ன சிலந்திப்பட்டு...? - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, May 13, 2021

தினம் ஒரு தகவல் : அது என்ன சிலந்திப்பட்டு...?

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்துதான் மனித இனம் வீடு கட்டி வசிக்கும் வழக்கத்தை கொண்டிருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே சிலந்தி இனம் வலைபின்னி அதை தன் வீடாக்கி வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத இடம் என்பதை உணர்த்த, சிலந்தி வலையை ஒதுக்கியவாறே உள்ளே நுழைவதைப் போன்ற காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். 

சிலந்தி வலைகள் பல சுவாரசிய பண்புகளை கொண்டிருக்கின்றன. புரதத்தில் இருந்து பட்டு இழைகளை உருவாக்கும் பட்டுப்பூழுக்களை போலவே, சிலந்திகளும் புரதங்களில் இருந்தே வலைகளுக்கான இழைகளை உருவாக்குகின்றன. அறிவியலில் சிலந்தி வலை, ‘சிலந்திப்பட்டு’ என்று அழைக்கப்படுகிறது.

  பட்டுப்புழுவில் ஒரே வடிவ அமைப்புகளை கொண்ட புரதங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், சிலந்திப்பட்டுக்கோ இரைதேட, ஆபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, வசிப்பிடம் அமைக்க, வழி மறக்காமல் இருக்க... என்று பல தேவைகள் இருப்பதால், ஒவ்வொரு வகை சிலந்திப்பட்டும் ஒவ்வொரு மாதிரியான வடிவ, மூலக்கூறு அமைப்புகளைக் கொண்டிருக்கும். 


சிலந்திகளின் அடிவயிற்றில் இருக்கும் பிரத்யேக சுரப்பிகள், தனிப்பட்ட பண்பு கொண்ட சிலந்திப்பட்டு இழையை உற்பத்தி செய்கின்றன. சிலந்தி வலை கட்டுமானம் என்பது குறைந்தது மூன்று அல்லது நான்கு வகை சிலந்திப்பட்டு இழைகளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. எல்லா சிலந்திப்பட்டுவும் ஒட்டும் தன்மையுடன் இருக்காது. அப்படி இருந்தால் சிலந்தியாலேயே வலையில் நடமாட முடியாது. எனவே, மிகவும் திட்டமிட்டு பலவகை இழைகளைக் கொண்டு அவை வலை பின்னுகின்றன. 


சிலந்திப்பட்டின் சில வகைகள் அதிர்வுகளைத் தாங்கக்கூடியதாகவும் அதிக நெகிழ்வுத்தன்மை உடையதாகவும் இருக்கின்றன. இத்தனை பண்புகள் கொண்ட சிலந்திப்பட்டுவை பரவலாக்க முடியாததற்கு காரணம், பட்டுப்புழுபோல் கொத்துக் கொத்தாக சிலந்திகளை வளர்த்து சிலந்திப்பட்டு தயாரிக்க முடியாது. அருகருகே இருக்கும் இரு சிலந்திகள், இரண்டில் ஒன்று இறக்கும் வரை சண்டையிடும். எனவே மொத்தமாக வளர்த்தால் மிகப்பெரிய போர்க்களம்தான். நேரடியாகச் சிலந்திகளை வளர்த்து அவற்றில் இருந்து சிலந்திப்பட்டு பெறுவது கடினம் என்பதால், ஆய்வாளர்கள் வேறு முறைகளைச் சோதித்த வண்ணம் இருக்கிறார்கள். 

பாக்டீரியாக்களை சிலந்திப்பட்டு சுரக்கச்செய்யும் ஆய்வு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. மொத்தமாக சிலந்தி இழைகளை உற்பத்தி செய்யும் நிலை வந்துவிட்டால் ஆடை வடிவமைப்பு முதல் ராணுவப் பயன்பாடுவரை சிலந்திப்பட்டு எனப்படும் ஆடை வகையின் ஆதிக்கம் மேலோங்கும் என்கிறார்கள், இதுதொடர்பான ஆராய்ச்சியாளர்கள்.