கின்னஸ் புத்தகம் உருவான கதை..! - துளிர்கல்வி

Latest

Saturday, July 17, 2021

கின்னஸ் புத்தகம் உருவான கதை..!



கின்னஸ், உயரிய அங்கீகாரம். சாகசம் புரிபவர்களுக்கு கிடைக்கும் கவுரவம். அந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உலகமே ஏங்குகிறது. கின்னஸ் புத்தகம் எப்படி உருவானது?, எதற்காக உருவானது?, அதை யார் உருவாக்கியது? போன்ற கேள்விகளுக்கு விடை வேண்டுமா..? நாங்கள் கொடுக்கிறோம். கின்னஸ் புத்தகத்தை உருவாக்கியவர், சர் ஹ்யூக் பீவர். இங்கிலாந்துக்காரர். போலீசாக பணியாற்றிவிட்டு, பிறகு பல நாடுகளில், பல நிறுவனங்களில் வேலை பார்த்தார். ஒருநாள் அயர்லாந்தில் நடந்த ‘ஷூட்டிங் பார்ட்டி’ விருந்துக்குச் சென்றிருந்தார். ஒரு ஆற்றங்கரையிலோ, கடற்கரையிலோ மக்கள், கூட்டமாகக் கூடி துப்பாக்கி சுடும் போட்டி நடத்துவார்கள். எது சிக்குகிறதோ அதைச் சுட்டுத் தள்ளுவார்கள். இதுதான் ஷூட்டிங் பார்ட்டியின் சாரம்சம். அன்றைக்கு ஸ்லேனி ஆற்றங்கரையில் ஷூட்டிங் பார்ட்டி. அங்கே ஒரு விவாதம். ஐரோப்பாவில் இருக்கும் பறவைகளில் வேகமானது ‘கோல்டன் குளோவரா?’ அல்லது ‘கிரௌஸா?’ என விவாதம் நடக்க, இறுதிவரை முடிவே கிடைக்கவில்லையாம். இரு பறவைகளில் எது வேகமானது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை, எந்தக் குறிப்புகளும் இல்லை, அது தொடர்பான ஒரு புத்தகம் கூட இல்லை. அதன் பிறகு ஹ்யூக்-குக்கு இதுபோல எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதிக நேரம் தூங்கியவர் யார்?, நீண்ட நேரம் பாடியவர் யார்?... இப்படி பதில் இல்லாத கேள்விகளுக்கு, பதில் தேடி ஒரு புத்தகம் வெளியிட்டால் எப்படி இருக்கும்..? என்ற யோசனையில்தான், கின்னஸ் புத்தகம் பிறந்தது. சர் ஹ்யூக் பீவருடன் நோரிஸ், ரோஸ் மெக்வ்ரிட்டர், கிறிஸ்டோபர் ஆகியோர் இணைந்து, தகவல்களை திரட்டி, 1955-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 198 பக்கங்கள் கொண்ட ‘கின்னஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ்’ புத்தகத்தை வெளியிட்டனர். அதுவே இன்று பல உலக சாதனைகளுக்கு பிறப்பிடமாகி இருக்கிறது.

No comments:

Post a Comment