இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறையில் செயல்படுவது குறித்து வழிகாட்டல் நெறிமுறைகள் வெளியீடு! - ThulirKalvi

Latest

Search Here!

Monday, May 9, 2022

இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறையில் செயல்படுவது குறித்து வழிகாட்டல் நெறிமுறைகள் வெளியீடு!

இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறையில் செயல்படுவது குறித்து வழிகாட்டல் நெறிமுறைகள் வெளியீடு! 


இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் ஆர்வத்தின் காரணமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் முக்கிய முடிவுகள் தன்னார்வலர்களின் கருத்தினை கேட்டு ஜனநாயக அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. மையங்கள் நடத்துவது தொடர்பான பல்வேறு விதமாக கருத்துக்கள் தெரிவித்துள்ள தன்னார்வலர்களின் உணர்வுகள் மற்றும் மாணவர்களின் ஆர்வம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு மே மாதத்தில் இல்லம் தேடி கல்வி மையங்கள் இயங்குவது குறித்து கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. 

 1) மே 13-ம் தேதி வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்வதற்கு மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் உதவி செய்யலாம். 

 2) 19 சதவீத தன்னார்வலர்கள் கோடைகாலங்களில் இயல்பான வகுப்பை தவிர்த்து வாசித்தல் கதை சொல்லுதல் போன்ற செயல்பாடுகளை செய்யலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு வாசித்தல் திறனை மேம்படுத்துவதற்கு கோடை விடுமுறைக் காலங்களில் தன்னார்வலர்கள் கதை சொல்லுதல் நூல் வாசித்தல் போன்ற செயல்களைச் செய்யலாம். இதற்கான நூல்களை அருகில் உள்ள சில நூலகங்களில் தன்னார்வலர்கள் உறுப்பினர்கள் ஆகி பெற்றுக்கொள்ளலாம். பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள புத்தக பூங்கொத்து மற்றும் பள்ளி நூலகங்களில் உள்ள நூல்களையும் வாசிப்பு இயக்கத்திற்காக தன்னார்வலர் களுக்கு வழங்கலாம். 

 3) இல்லம் தேடிக் கல்வி மாலை நேரங்களில் செயல்படுவதால் தொடர்ந்து நடத்தலாம் என்று 16 சதவீத தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர்களும் இல்லம் தேடி கல்வி வருவதற்கு ஆர்வமாக உள்ளனர் என்றும் எனவே அவர்களது ஆர்வத்தை தடுக்கக்கூடாது என்றும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறைக் காலங்களில் இல்லம் தேடி கல்விக்கு வர விரும்பும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் வகுப்புகள் எடுக்கலாம். மாணவர்கள் கல்வி பயில எந்த தடையும் இல்லை. கோடை விடுமுறைக் காலங்களில் வகுப்புகள் நடைபெறும் அதில் மாணவர்கள் பங்கேற்கலாம் என்பது குறித்த தகவல்களை பெற்றோருக்கு தன்னார்வலர்கள் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்கள் இசைவுடன் மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தன்னார்வலர்கள் இல்லம் தேடிக் கல்வி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

 4) விடுமுறை காலங்களில் மாணவர்கள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள் எனவே விளையாட்டு வழி சொல்லித் தரலாம் என்று 14 சதவீதம் தன்னார்வலர்கள் வாக்களித்துள்ளனர். விளையாட்டு மற்றும் பாடல் வழி கற்பித்தல் இல்லம் தேடி கல்வியின் பிரிக்க இயலாத அங்கமாகும். இல்லம் தேடிக் கல்வி மாலை நேரங்களில் நிழல் சூழ்ந்த பகுதியில் விளையாட்டு வழி கற்பிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. 

 5) மாணவர்கள் சிலர் வெளியூர் சென்று விடுவார்கள் எனவே அவர்களுக்கு விடுமுறை வேண்டும் என்று 55 சதவீத தன்னார்வலர்கள் வாக்களித்துள்ளனர். கோடை விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியூர் செல்வது இயல்பு. அவ்வாறு வெளியூர் செல்லும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வியில் விடுமுறை அளிக்க வேண்டும். ஒரு மையத்தில் சில மாணவர்கள் மட்டும் வெளியூர் சென்றால் மற்ற மாணவர்கள் வகுப்புகள் வர சம்மதித்தால் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் எடுக்கலாம். வெளியூர் செல்லும் மாணவர்கள் வெளியூர் செல்லும் இடத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் மாலை நேரங்களில் கற்கலாம். வெளியூர் சென்ற மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திரும்பிய பிறகு இல்லம் தேடி கல்வி மையத்தில் தொடர்ந்து பயிலலாம். 

 6) தன்னார்வலர்கள் வெளியூர் செல்வதால் அக்காலத்தில் இல்லம் தேடிக் கல்வி நடத்த இயலாது எனவே விடுமுறை வேண்டும் என்று 8 சதவீத தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேறு சொந்த காரணங்களால் விடுமுறை வேண்டும் என்று 6 சதவீத தன்னார்வலர்கள் வாக்களித்துள்ளனர். தன்னார்வலர்கள் எதிர்வரும் போட்டி தேர்வுக்கு தயாராவது மற்றும் கோடை விடுமுறையில் வெளியூர் செல்வது ஆகிய காரணங்களால் விடுமுறை கேட்பது நியாயமான கோரிக்கைகள் ஆகும். இவ்வாறு விடுமுறை கோரும் தன்னார்வலர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு 14.5.2022 முதல் 31.5.2022 விடுமுறை வழங்கப்படுகிறது. தாங்கள் விடுமுறையில் செல்லும் நாட்கள் குறித்த விவரத்தினை மையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் தெரிவிக்க வேண்டும். இக்காலங்களில் தன்னார்வலர்கள் ஆன்லைன் வருகைப் பதிவு செய்யத் தேவையில்லை. கோடைகால சிறப்பு முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் கோடை விடுமுறையில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கீழ்க்கண்ட சிறப்பு பயிற்சிகள் மற்றும் சிறப்பு முயற்சிகள் எடுக்கலாம். 

 1) ஜூன் முதல் வாரத்திலிருந்து இல்லம் தேடிக் கல்வி மாணவர்கள் பங்கேற்கும் மாபெறும் வாசிப்பு இயக்கம் நடைபெற உள்ளது. இதற்கு தயார்படுத்தும் வகையில் மாணவர்களை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று நூல்கள் படிப்பதற்கு கற்றுத்தர வேண்டும். 

 2) மாணவர்களின் வாசித்தல் திறனை அதிகப்படுத்த Google read along செயலி மூலம் வாசித்தல் இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதற்கான பயிற்சியை தன்னார்வலர்கள் இணையவழி கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான விரிவான பயிற்சி அட்டவணை மாநில அலுவலகத்திலிருந்து தனியாக அனுப்பி வைக்கப்படும். 

 3) தன்னார்வலர்களின் அனுபவங்கள் மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவை குறித்து தன்னார்வலர்கள் தங்களுக்குள் கருத்து பகிர்ந்து கொள்வதற்கான கருத்து பகிர்வு இணையவழி காணொலி கருத்தரங்கங்கள் கோடை காலங்களில் நடத்தப்படும். இதில் தன்னார்வலர்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும். வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இணையவழி கருத்து பகிர்வு அட்டவணையை வெளியிட்டு டெலிகிராம் செயலி, கூகுள் மீட், ஆகியவற்றின் வழியாக நடத்தலாம். 

 4) எதிர் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய சிறப்பு முயற்சிகள் குறித்து தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களுடன் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க உதவும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும், பள்ளி மேலாண்மைக்குழுகளுக்கும் மாவட்ட அளவில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கலாம். 

 5) இல்லம் தேடிக் கல்வி மாணவர்களுக்கு நடத்தப்படும் அடிப்படை ஆய்வு (Baseline survey) நடைமுறையை மே 13-ஆம் தேதிக்குள் தன்னார்வலர்கள் அனைத்து மாணவர்களுக்கும் நிறைவுசெய்ய அறிவுறுத்த வேண்டும். 

 6) இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு வழங்கப்படும் கையேடு மற்றும் பயிற்சி அட்டைகள் விரைவில் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு உரிய விளக்க உரையுடன் அளிக்க வேண்டும். பயிற்சி அட்டவணை மாநில அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். எனவே வழிகாட்டு நெறிமுறைகளை தன்னார்வலர்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் வாயிலாக தகவல் தெரிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 சிறப்புப் பணி அலுவலர் 
இல்லம் தேடிக் கல்வி