பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இணை இல்லாத படிப்புகள் எவை?
உயர்கல்வித்துறை தகவல்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் சிலவற்றில் கற்றுத்தரக்கூடிய படிப்புகள், சில முக்கியமான படிப்புகளுக்கு இணையானவையாக கருதப்படுவது இல்லை. இதனால் அந்தப்படிப்புகளை தேர்வு செய்பவர்கள், அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அந்தவகையில் சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இணை இல்லாத படிப்புகள் எவை? என்பது பற்றிய தகவலை உயர்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வேலைவாய்ப்பு நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு, திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.காம். கணினி பயன்பாடு படிப்பு, பி.காம் படிப்புக்கு சமமான படிப்பு இல்லை. அதேபோல், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. கூட்டுறவு படிப்பு, எம்.காம் படிப்புக்கு இணையானது அல்ல.
ஐதராபாத் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்பாடு கணிதம், எம்.எஸ்சி. கணிதம் படிப்புக்கு சமமானது அல்ல. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. சுற்றுச்சூழலியல் படிப்பு எம்.எஸ்சி. நுண்ணுயிரியல் படிப்புக்கு இணையானதாகக் கருதப்படாது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படு்ம் பி.லிட். படிப்பு பி.ஏ. தமிழ் படிப்புக்கு சமமானது அல்ல.
சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பிஎஸ்சி. நுண்ணுயிரியல் படிப்பும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எஸ்சி உயிரி-தொழில்நுட்பம் படிப்பும், பி.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படாது.
இதுதவிர, சென்னை மாநிலக் கல்லூரியால் (தன்னாட்சி அந்தஸ்து) வழங்கப்படும் எம்.எஸ்சி. நுண்ணுயிரியல் படிப்பும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்சி. உயிரி தொழில்நுட்பம் படிப்பும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்சி. மரையன் பயாலஜி படிப்பும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்சி. பயோ-மெடிக்கல் சயின்ஸ் படிப்பும் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு சமமானது இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment