Tamil Nadu Press Release on 30.11.2020 | தமிழக அரசின் இன்றைய (30.11.2020) செய்திக் குறிப்பு | உலக எய்ட்ஸ் தின செய்தி - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, December 1, 2020

Tamil Nadu Press Release on 30.11.2020 | தமிழக அரசின் இன்றைய (30.11.2020) செய்திக் குறிப்பு | உலக எய்ட்ஸ் தின செய்தி

Tamil Nadu Press Release on 30.11.2020 | தமிழக அரசின் இன்றைய  (30.11.2020) செய்திக் குறிப்பு | உலக எய்ட்ஸ் தின செய்தி 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் உலக எய்ட்ஸ் தின செய்தி


மக்களிடையே எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்து "உலகளாவிய ஒற்றுமை"  "பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல்"  (Global Solidarity, Shared Responsibility)  ஆகும். 

எச்ஐவி / எய்ட்ஸ் நோயைத்   தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசால் தனி கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் எச்ஐவி தொற்றின் சதவீதம் 2011ம் ஆண்டு 0.38% இருந்தது 2019ஆம் ஆண்டு ஜூலை 0.18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய எச் ஐ வி தொற்றினைக் கண்டறிய 3161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்ஐவி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் 174 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.  எச்ஐவி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும்  சிறப்பு மருத்துவ சிகிச்சை மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் அளிக்கப்படுகிறது.

எச்ஐவி  / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உயரிய நோக்கில் மாண்புமிகு அம்மாவின் அரசு அவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்  திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 1000 ஓய்வூதியம் வழங்குதல்,  எச்ஐவி தொற்று பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பைத் தளர்த்தி மாத ஊதியம் வழங்குதல், எச்ஐவி  / எய்ட்ஸ் தொற்று நோய் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

மேலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆதரவு சிகிச்சை பராமரிப்பு மற்றும் தொடர் சேவைகள் கிடைக்கப் பெற இளைப்பாருதல்  மையம் (Drop in Centre)  திட்டத்திற்காக 2.41 கோடி ரூபாய் நிதி உதவியுடன் மாநிலம் முழுவதும் சுமார் 34 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இந்த நிதியாண்டு முதல் (2020 2021) செயல்பட்டு வருகிறது. 

எச்ஐவி /  எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எச்ஐவி  /  எயிட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதி ஏற்று எச்ஐவி  /  எயிட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு,  அவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

                                                                                 மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர்