6ம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - இயல் ஒன்று -கல்வி -கண்ணெனத் தகும் - வினா - விடைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, October 17, 2022

6ம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - இயல் ஒன்று -கல்வி -கண்ணெனத் தகும் - வினா - விடைகள்

PREPARED BY THULIRKALVI TEAM

ஆறாம் வகுப்பு
இரண்டாம் பருவம் 
தமிழ்
மூதுரை
பக்கம் 3
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர்கள் நூல்களை ………….. கற்க வேண்டும். 
அ) மேலோட்டமாக ஆ) மாசுற இ) மாசற ஈ) மயக்கமுற
விடை: இ) மாசற 
 
2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இடம் + மெல்லாம் ஆ) இடம் + எல்லாம் இ) இட + எல்லாம் ஈ) இட + மெல்லாம் விடை: ஆ) இடம் + எல்லாம்

 3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) மாச + அற ஆ) மாசு + அற இ) மாச + உற ஈ) மாசு + உற 
விடை: ஆ) மாசு + அற 

 4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 
அ) குற்றமில்லாதவர் ஆ) குற்றம் இல்லாதவர் இ) குற்றமல்லாதவர் ஈ) குற்றம் அல்லாதவர் 
விடை: அ) குற்றமில்லாதவர் 

5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 
அ) சிறப்பு உடையார் ஆ) சிறப்புடையார் இ) சிறப்படையார் ஈ) சிறப்பிடையார் விடை: ஆ) சிறப்புடையார் 

குறுவினா 

1. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை? 
விடை:
 (i) மன்னனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கற்றவரே சிறந்தவர். 

(ii) மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

 சிறுவினா

1. கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்? 
விடை
(i) கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாகக் கருதத்தக்கது. 
ii) கல்வி பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும். 

(iii) கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது. 

(iv) அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான். மன்னனையும் குறை இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவராகக் கருதப்படுவர்.

 (v) மன்னனாக இருந்தாலும் அவனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு கிடைக்கும். ஆனால் கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு கிடைக்கும். 

 சிந்தனை வினா 

 1. கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக. 

விடை:
 கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகள் :
(i) கல்லாதவர் எவராலும் மதிக்கப்பட மாட்டார். வீட்டில் பெரிய பிள்ளையாக இருந்தாலும் கற்கவில்லையெனில் பெற்றோர் அவனை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள். 

(ii) நன்மை தீமைகளைப் பகுத்தறிய இயலாது. எல்லோராலும் இகழப்படுவான்.



துன்பம் வெல்லும் கல்வி 
பக்கம் 6
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர் …………. நடக்கக் கூடாது. 
அ) போற்றும்படி ஆ) தூற்றும்படி இ) பார்க்கும்படி ஈ) வியக்கும்படி 
விடை: ஆ) தூற்றும்படி 

2. நாம் …………… சொல்படி நடக்க வேண்டும். அ) இளையோர் ஆ) ஊரார் இ) மூத்தோர் ஈ) வழிப்போக்கர் 
விடை: இ) மூத்தோர் 

 3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
 அ) கையில் + பொருள் ஆ) கைப்+பொருள் இ) கை + பொருள் ஈ) கைப்பு + பொருள்
விடை: இ) கை + பொருள் 

4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
 அ) மானம் இல்லா ஆ) மானமில்லா இ) மானமல்லா ஈ) மானம்மில்லா 
விடை: ஆ) மானம்மில்லா 

 சொற்றொடரில் அமைத்து எழுதுக 

 1. மனமாற்றம் – பெற்றோர் கூறிய அறிவுரையைக் கேட்டு கந்தன் மனமாற்றம் அடைந்தான்.

 2. ஏட்டுக் கல்வி – ஏட்டுக் கல்வியுடன் தொழிற்கல்வியும் பெறுதல் சிறப்பானது.

 3. நல்லவர்கள் – நல்லவர்களுடன் சேர்ந்து பழகுதல் இன்பம் தரும். 

4. சோம்பல் – மாணவர்கள் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.

 குறுவினா 

 1. நாம் யாருடன் சேரக் கூடாது?
 விடை: நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.

2. எதை நம்பி வாழக் கூடாது?
விடை: பிறருடைய உழைப்பை நம்பி வாழக்கூடாது.  

 3. இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள் எது?
விடை: இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 

4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
விடை: மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ்ந்தால், அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறலாம். 


 சிறுவினா 

  1. நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?
விடை: (i) நாம் நூல்களைக் கற்றதோடு இருந்துவிடக்கூடாது; கற்றதன் பயனை மறக்கக்கூடாது. (ii) நம் நாட்டின் நெறி தவறி நடக்கக்கூடாது. 

நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.

 (iii) பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக்கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக்கூடாது. 

 (iv) பிறருடைய உழைப்பில் வாழக்கூடாது. தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலைப் போக்கிட வேண்டும். 

 (v) பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 (vi) மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெற வேண்டும்.

 (vii) பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும். நாம் இவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்யைார் கூறுகிறார். 

 சிந்தனை வினா

1. நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?

விடை: நான் படித்து மாவட்ட ஆட்சியராக விரும்புகிறேன். ஏனெனில் மாவட்ட ஆட்சியரின் பணி ஒரு மாவட்டத்தையே பாதுகாக்கும் பணியாகும். அவருடைய அனுமதியின்றி பொது இடங்களைப் பயன்படுத்த முடியாது. 

எந்த அரசியல் கட்சிகளும் அவரை வழிநடத்த முடியாது. மக்கள் வாழும் இருப்பிடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது முதல் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தூர்வாருதல் வரை அவருடைய இன்றியமையாதப் பணியாகும். அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளின் குறைகளை அவர் நினைத்தால் சரி செய்ய இயலும்.

 அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும். நான் மாவட்ட ஆட்சியரானால் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களை அழைத்து வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை நோய்களின் தன்மை குறித்தும் அவற்றிலிருந்து நாம் நம்மைப் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தச் செய்வேன். 

பள்ளிகளில் தூய்மையாக இருப்பதின் அவசியத்தைக் கூறி பள்ளிகள் மூலம் மாணவர்களை அழைத்துக் கொண்டு சுத்தம் செய்ய வைப்பேன். நெகிழிப் பொருட்களைப் பற்றி விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவேன். 

 நிலம் கையகப்படுத்துதல், வரிப் பணம் நிலுவை, வேளாண் கடன்கள் நிலுவை இவையெல்லாம் இல்லாமல் செய்வேன். பஞ்சம் அல்லது தொற்று நோய்கள், இயற்கை அழிவுகளின் போது மருத்துவ முகாம் அமைத்து மக்களை நோய்கள் அணுகாமல் இருக்க வகை செய்வேன். சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பேன். 

இந்தியாவிலேயே என் ஆட்சியின் கீழ் உள்ள மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு என்னால் ஆன எல்லாப் பணிகளையும் செய்வேன்.

கல்விக்கண் திறந்தவர் 
பக்கம்10

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் 
அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை இ) வழி தெரியவில்லை ஈ) பேருந்து வசதியில்லை 
விடை: ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை 

 2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 
அ) பசி + இன்றி ஆ) பசி + யின்றி இ) பசு + இன்றி ஈ) பசு + யின்றி 
விடை: அ) பசி + இன்றி 

 3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
 அ) படி + அறிவு ஆ) படிப்பு + அறிவு இ) படி + வறிவு ஈ) படிப்பு + வறிவு 
விடை: ஆ) படிப்பு + அறிவு 

 4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 
அ) காட்டாறு ஆ) காடாறு இ) காட்டு ஆறு ஈ) காடுஆறு 
விடை: அ) காட்டாற 

 சொற்றொடரில் அமைத்து எழுதுக 

 அ) வகுப்பு – வகுப்பில் உள்ள அனைவருடனும் அன்போடு பழக வேண்டும். 

ஆ) உயர்கல்வி – மாணவர்கள் உயர்கல்வி பெற்று நம் நாட்டிலேயே பணிபுரிய வேண்டும். 

இ) சீருடை – பள்ளிக்குச் சீருடையில்தான் செல்ல வேண்டும்.

 கோடிட்ட இடங்களை நிரப்புக

 1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ……………. அறிமுகப்படுத்தினார். 

2. காமராசரைக் ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் ………………………

விடை: 1. சீருடை 2. தந்தை பெரியார் 

 குறுவினா 

 1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை? 
Answer: காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் : 
(i) பொறியியல் கல்லூரிகள் 

(ii) மருத்துவக் கல்லூரிகள் 

(iii) கால்நடை மருத்துவக் கல்லூரிகள் 

(iv) ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் 

2. காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது?
விடை: காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி :
 (i) தமிழகத்தில் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.

 (ii) மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். 

 சிறுவினா 

 1. காமராசரின் மதிய உணவுத் திட்டம் குறித்து எழுதுக. 
விடை

காமராசரின் மதிய உணவுத் திட்டம் : 

(i) ஒருமுறை காமராசர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தேசியக் கொடி ஏற்றுவதற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு ஒரு மாணவன் மயங்கிக் கீழே விழுந்தான். தண்ணீ ர் தெளித்து அவனை எழுப்பினர். மயக்கம் தெளிந்த சிறுவனிடம் காமராசர், “காலையில் சாப்பிட்டாயா?” என்று கேட்டார். அவன் “எதுவும் சாப்பிடவில்லை ” என்றான். சாப்பிடாமல் வந்ததற்குக் காரணம் கேட்டதில் “சாப்பிட எதுவும் இல்லை ” என்று பதில் கூறினான்

(ii) இந்நிகழ்விற்குப் பிறகு, படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார். மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

 சிந்தனை வினா 

 1. நீங்கள் முதலமைச்சரானால் கல்வி முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை வகுப்பீர்கள்? 
விடை

முன்னுரை:

 நான் முதலமைச்சரானால் என்ன பணிகளைச் செய்வேன் என்பதையும், என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவேன் என்பதையும் கூற விரும்புகிறேன். 

மாணவர்களுக்குப் பயன்தரும் திட்டங்கள்: 

மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் சென்றுவர சிறப்புப் பேருந்துகளை இயக்க உத்தரவிடுவேன். 

ஏழை மாணவர்களும் உயர் கல்வி பெற உதவித்தொகை வழங்குவேன்.

 பெண் கல்விக்கு ஊக்கமளிப்பேன். 

மின் உற்பத்தியைப் பெருக்குவேன்: 

மின் பற்றாக்குறையைப் போக்க புதிய மின் உற்பத்தி நிலையங்கள் துவங்க உத்தரவிடுவேன். தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அனைவருக்கும் வேலைவாய்ப்பளிக்க விரைந்து செயல்படுவேன். 

 முடிவுரை: 

உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை அனைத்து மக்களும் பெற்று இன்புற்று வாழ வழிவகை காண்பேன். கல்வி வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவேன். அனைவரும் எனக்கு ஆதரவு தர அன்புடன் வேண்டுகிறேன். 

நூலகம் நோக்கி
பக்கம்14

 அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக. 

விடை

முன்னுரை : 

‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்பது முதுமொழி. நம் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்குப் பெரிதும் பயன்படுவது நூலகம். 

 நூலகத்தின் வகைகள் :

 மாவட்ட நூலகம், 
கிளை நூலகம், 
ஊர்ப்புற நூலகம், 
பகுதி நேர நூலகம்,

 தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும். 

அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பற்றி இக்கட்டுரையில் – காண்போம்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டில் உள்ளது. இது சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் உள்ளது. 

இது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும்.

 இது எட்டு அடுக்குகளைக் கொண்டது. 

 தரைத்தளம் : 

தரைத்தளத்தில் பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்களுக்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலிவடிவ நூல்கள் குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர். இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. படிக்கும் வசதியும் உண்டு. இதுமட்டுமின்றி சொந்த நூல்களைக் கொண்டு சென்று படிப்பதற்கான படிப்பகமும் உண்டு . 

 முதல் தளம் : 

முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் வைக்கப்பட்டுள்ளன. பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன. இரண்டாவது தளம் : இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாக வைக்கப்பட்டுள்ளன.

 இங்குத் தமிழறிஞர்கள் பலருடைய நூல்கள், பொது அறிவு நூல்கள், கணினி கலைக்களஞ்சியம், சமய நூல்கள், வணிகவியல், சட்டம், தமிழ் அகராதி, இலக்கண நூல்கள் என எண்ணற்ற நூல்கள் உள்ளன. 


 மூன்றாம் தளம் : 

இத்தளங்களில் ஆங்கில நூல்கள் பாடவாரியாக பகுத்து வைக்கப்பட்டுள்ளன. கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள், பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி, கணிதம் அறிவியல், மருத்துவம், பொறியியல், வேளாண்மை , திரைப்படக்கலை, வரலாறு, சுற்றுலா பயண மேலாண்மை மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன. இங்கும் பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 

 எட்டாம்தளம் : 

எட்டாம் தளத்தில் நூலகத்தின் நிர்வாகப் பிரிவு உள்ளது. இந்நூலகத்தின் சிறப்பம்சம். யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. 

 முடிவுரை : 

இந்நூலகத்தில் அனைத்து வகைப் போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான நூல்கள் உள்ளன. மின் நூலகமும் உள்ளது. அனைத்துத் துறை சார்ந்த தரமான மின் நூல்களும் மின் இதழ்களும் உள்ளன. இந்நூலகத்தை அனைவரும் பயன்படுத்தி அறிவை விரிவு செய்வோம்.

 இன எழுத்துகள் 
பக்கம்16

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

 1. மெல்வினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது? 
அ) மஞ்சள் ஆ) வந்தான் இ) கல்வி ஈ) தம்பி
விடை: இ) கல்வி 

2. தவறான சொல்லை வட்டமிடுக. அ) கண்டான் ஆ) வென்ரான் இ) நண்டு ஈ) வண்டு
விடை: ஆ) வென்ரான்

 பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக 

 பிழையான சொல் – திருத்தம்

 தெண்றல் – தென்றல் 

கன்டம் – கண்டம் 

நன்ரி – நன்றி 

மன்டபம் – மண்டபம் 

 சிறுவினா 

  1. இன எழுத்துகள் என்றால் என்ன? 
விடை: சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

 (i) வல்லின மெய்களுக்கு மெல்லின மெய்கள் இனம். இடையின எழுத்துகள் ஆறும் ஒரே இனம். 

(ii) உயிர்க்குறிலுக்கு உயிர்நெடிலும் உயிர் நெடிலுக்கு உயிர்க் குறிலும் இனம்.

 (iii) ‘ஐ’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்ற எழுத்து இனம். ‘ஔ’ என்னும் எழுத்துக்கு ‘உ’ என்ற எழுத்து இனம். 

 
 மொழியை ஆள்வோம்

 தொடர்களை நீட்டித்துப் புதிய தொடர்களை உருவாக்குங்கள்.

 1. மழை பெய்தது. 
விடை:
 (i) புயல் மழை பெய்தது.
 (ii) தொடர்ந்து புயல் மழை பெய்தது. 
(iii) நேற்று தொடர்ந்து புயல் மழை பெய்தது. 
(iv) சென்னையில் நேற்று தொடர்ந்து புயல் மழை பெய்தது.

 இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள்

 1. (நூல், மாலை, ஆறு, படி) 
(எ.கா) ஆடை தைக்க உதவுவது நூல்
 மூதுரை அற நூல் 
விடை: 1. மாலை – திருமாலுக்கு அணிவிப்பது துளசி மாலை. மாலை வெயில் உடலுக்கு நல்லது. 

2. ஆறு – சுவைகள் மொத்தம் ஆறு. வைகையாற்றின் துணையாறுகளுள் ஒன்று மஞ்சளாறு.

 3. படி – நூலை எடுத்துப் படி. மேலே ஏறுவதற்குப் பயன்படுவது படி. 

 பின்வரும் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குகள்


விடை: (i) ஆசிரியர் கவிதை எழுதுகிறார்.

 (ii) மாணவன் கவிதை எழுதுகிறான்.

 (iii) ஆசிரியர் பாடம் படிக்கிறார்.

 (iv) மாணவன் பாடம் படிக்கிறான். 

(v) ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்.

 உரையாடலை நிறைவு செய்யுங்கள் 

 மாணவர் : வணக்கம் ஐயா, 

தலைமை ஆசிரியர் : வணக்கம் மதி உனக்கு என்ன வேண்டும்? 

மாணவர் : எனக்கு மாற்றுச் சான்றிதழ் வேண்டும் ஐயா. 

தலைமை ஆசிரியர் : எதற்காக மாற்றுச் சான்றிதழ் வேண்டும்?

 மாணவர் : என் தந்தைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது ஐயா. 

தலைமை ஆசிரியர் : அப்படியா! எந்த ஊருக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது?

 மாணவர் : மதுரைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது. 

தலைமை ஆசிரியர் : அங்கு எந்தப் பள்ளியில் சேரப் போகிறாய்?

 மாணவர் : அங்கு அரசுப் பள்ளியில் சேரப் போகிறேன். 

தலைமை ஆசிரியர் : நீ யாரை அழைத்து வந்துள்ளாய்?

 மாணவர் : என் அப்பாவை அழைத்து வந்திருக்கிறேன் ஐயா.

 கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது

 (குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தேசிய இளைஞர் தினம், கல்வி வளர்ச்சி நாள்) 

1. காமராசர் பிறந்த நாள் ……………….. 

2. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் …………………… 

3. அப்துல்கலாம் பிறந்த நாள் ………………………

 4. விவேகானந்தர் பிறந்த நாள் ……………….. 

5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் ………………. 

விடை: 1. கல்வி வளர்ச்சி நாள் 2. ஆசிரியர் தினம் 3. மாணவர் தினம் 4. தேசிய இளைஞர் தினம் 5. குழந்தைகள் தினம் 

இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை வட்டமிடுங்கள் 
 கங்கை, பக்கம், வண்டு, மண்டப ம், மங்கை,
வெந்தய ம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்கா ளி, மஞ்சள்,
கம்பள ம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்



கீழ்க்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துகளை எடுத்து எழுதுங்கள் 

 1. சங்கு – ங்கு

 2. நுங்கு – ங்கு 

3. பிஞ்சு – ஞ்சு 

4. வஞ்சம் – ஞ்ச 

5. பட்டணம் – ட்ட 

6. சுண்டல் – ண்ட

 7. வண்டி – ண்டி

 8. பந்தயம் – ந்த

 9. பந்து – ந்து 

10. கற்கண்டு – ண்டு

 11. தென்றல் – ன்ற

 12. நன்று – ன்று 

பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்

 காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க?’ என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்… ” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள், “அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுதான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். 

 மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

 1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் …………… 
அ) பெற்றோர் ஆ) சிறுவன், சிறுமி இ) மக்கள் ஈ) ஆசிரியர்கள் 
விடை: ஆ) சிறுவன், சிறுமி 

2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
 அ) ஏழ்மை ஆ) நேர்மை இ) உழைப்பு ஈ) கல்லாமை 
விடை: ஆ) நேர்மை 

 3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் …………………. 
விடை: நெகிழ்ந்தார்

  4. சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்? 
விடை: சிறுவனும் சிறுமியும் தன் அண்ணனுக்குத் தேர்வுக்குக் கட்டணம் கட்டுவதற்குப் பணம் இல்லாததால் பண உதவி கேட்டு காமராசரின் வீட்டிற்கு வந்தனர். 

5. காமராசர் செய்த உதவி யாது? 
விடை: காமராசர் ஏழை மாணவன் ஒருவனுக்குத் தேர்வுக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கொடுத்து உதவினார்.

 கட்டுரை எழுதுக 

1. காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

விடை

முன்னுரை : 

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்குக் குலதெய்வமான காமாட்சியின் பெயர் சூட்டப்பட்டது. அவருடைய தாயார் ‘ராசா’ என்று அழைத்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி ‘காமராசு’ என்று ஆனது. 

 இளமைக்காலம் : 

காமராசர் தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது அவருடைய தந்தை இறந்ததால் அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

 கல்விப் பணிகள் : 

காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளி வேலைநாள்களை நூற்றெண்பதிலிருந்து இருநூறாக உயர்த்தினார். தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது. பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டு, பள்ளிகளுக்கான அடிப்படைப் பொருள்களும் கருவிகளும் பெறப்பட்டன. உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. உடற்பயிற்சிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மருத்துவக் கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

 நிறைவேற்றிய பிற திட்டங்கள் : 

நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியில் ஒன்பது முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருட்டினகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். தொழில் முன்னேற்றத்திற்குக் காமராசர் செய்தவை பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை இவையனைத்தும் காமராசரால் தொடங்கப்பட்டவை ஆகும். 

 முடிவுரை : 

கல்விக் கண் திறந்த காமராசரின் பிறந்த நாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஏழைப் பங்காளராகவும், கர்ம வீரராகவும் தன்னலமற்ற தலைவராகவும் வாழ்ந்தவரின் அடியொற்றி நாமும் நாட்டிற்கு நன்மைகள் செய்வோம்.

 மொழியோடு விளையாடு

1. ‘கல்விக்கண் திறந்த காமராசர்’ இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி புதிய சொற்களை உருவாக்குங்கள். 

(எ.கா.) கண்.
 விடை: 1. கல்வி 2. கவி 3. கதி 4. ராசர் 5. விண் 6. திற 7. கா 8. வில் 9. கல் 10. திறந்த 

 முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க

1. முளையிலே விளையும் தெரியும் பயிர். 
விடை: விளையும் பயிர் முளையிலே தெரியும்.

 2. ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை. 
விடை: கல்லாமையை இல்லாமை ஆக்குவோம். 

 கீழ்க்காணும் கட்டங்களில் உள்ள இன எழுத்துச் சொற்களை வட்டமிட்டுத் தனியாக எடுத்து எழுதுக 
 (i) மண்டபம் 

(ii) பந்து

 (iii) சங்கு 

(iv) மஞ்சள்

 (v) தென்றல் 

 செயல் திட்டம் 

 1. காமராசர் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களுடன் ஒரு படத்தொகுப்பு (Album) உருவாக்கவும்.
விடை: காமராசர் நாளிதழ்களை படிக்கும்போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்குச் செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.

காமராசருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லோரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும்போது சாதாரண மனிதர் போலவே பேசுவார். 

காமராசர் 1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பைப் பயன்படுத்தி, பாராளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராசர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 வட இந்திய மக்கள் காமராசரை ‘காலா காந்தி’ என்று அன்போடு அழைத்தார்கள். ‘காலா காந்தி’ என்றால் ‘கறுப்பு காந்தி’ என்று பொருள். சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராசரையே சேரும். 12 ஆண்டுகள் காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

 காமராசர் இளம் வயதில் கொஞ்ச காலம் காப்புறுதி முகவராக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். காமராசர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷ்யாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தினராக வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. 

காமராசர் 1966-ஆம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவாக்கியா, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

 கலைச்சொல் அறிவோம் 

 1. கல்வி – Education

 2. தொடக்கப் பள்ளி – Primary School

 3. மேல்நிலைப் பள்ளி – Higher Secondary School 

4. நூலகம் – Library 

5. மின்படிக்கட்டு – Escalator

 6. மின்தூக்கி – Lift 

7. மின்னஞ்சல் – E – Mail 

8. குறுந்தகடு – Compact Disk (CD) 

9. மின் நூலகம் – E – Library 

10. மின்நூல் – E – Books 

11. மின் இதழ்கள் – E – Magazine

PREPARED BY THULIRKALVI TEAM

No comments:

Post a Comment