ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள் - ThulirKalvi

Latest

Search Here!

Monday, October 3, 2022

ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்

ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள் 

இரவு நேர பயணத்தின்போது சால்வை, சார்ஜர், சானிட்டரி நாப்கின், அவசியமான மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மறக்காமல் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். ரெயில் பயணம் பலருக்கும் பிடித்தமான விஷயம். தற்போது பல்வேறு காரணங்களால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் ரெயிலில் தனியாக பயணிக்கிறார்கள். அப்போது தங்களையும், தங்கள் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்வது நல்லது. 
அதற்கான ஆலோசனைகள் இங்கே… ரெயில் பயணத்துக்காக டிக்கெட் பதிவு செய்யும்போதே பெண்களுக்கான தனி இருக்கைகளைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள். அவ்வாறு முடியாத சூழலில் பயணம் செய்ய நேரிட்டாலும் முடிந்த அளவிற்கு பெண்கள் இருக்கைகள் இருக்கும் பகுதியை தேர்ந்தெடுங்கள். இரவு பயணங்களில் 'ஸ்லீப்பர்' முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், டிக்கெட் பதிவில் கூடுமானவரை 'அப்பர்பர்த்' எனப்படும் மேலே இருக்கும் படுக்கையைத் தேர்வு செய்வது நல்லது. இது பெண்களுக்கு பல வகைகளில் வசதியாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். தனியாக பயணம் செய்யும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், எந்தவித தயக்கமும் இல்லாமல் டிக்கெட் பரிசோதகர் அல்லது ரெயிலில் ரோந்து வரும் போலீசாரிடம் தெரிவியுங்கள். 
பயணத்தின்போது உங்களுக்குத் தேவையான தின்பண்டங்கள், தண்ணீர் போன்றவற்றை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், பலருக்கு ரெயிலில் வாங்கி சாப்பிடும் உணவு அசவுகரியத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. இரவு நேர பயணத்தின்போது சால்வை, சார்ஜர், சானிட்டரி நாப்கின், அவசியமான மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மறக்காமல் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். ரெயில் பயணம் மட்டுமில்லாமல், எந்தப் பயணமாக இருந்தாலும் விலை உயர்ந்த நகைகள், அதிக பணம் வைத்திருப்பதைத் தவிருங்கள். மற்றவர்கள் முன்பு உங்கள் பையை அடிக்கடி திறந்து மூடுவதைத் தவிர்ப்பது நல்லது. ரெயில் பயணத்தில் புதியவர்களிடம் அதிகம் பேசுவதைத் தவிர்க்கலாம். அவ்வாறு பேச வேண்டிய தேவை வந்தாலும், உங்களைப் பற்றிய தகவல்களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 
செல்போனில் பேசும் போதும் கவனம் தேவை. ரெயிலில் பயணம் செய்ய தேவையான முகவரி சான்றுகளை கைவசம் வைத்திருக்கிறீர்களா என்பதை கிளம்பும் போதே கவனித்துக் கொள்ளுங்கள். இல்லை என்றாலும் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்து முறையான நடவடிக்கைக்கு உட்படுங்கள். அதைத் தவிர்த்து, அந்த நேரத்தில் வேறு வழிகளை நாடுவது உங்களுக்கு சிக்கலை உண்டாக்கலாம். பயணத்தின் போது அணியும் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும். பிறர் கண்களுக்கு உறுத்தாத வகையில், உங்களுக்கு வசதியான ஆடைகளை அணிவது முக்கியம்.