மூன்று மீன்கள் - சிறுகதை
குட்டையில் மூன்று வகை மீன்கள்
அதிக மேடு பள்ளம் இல்லாத இடத்தில் நீர் நிறைந்த ஒரு குட்டை இருந்தது. அதில் நிறைய மீன்கள் வாழ்ந்தன. அவற்றுள் மூன்று மீன்கள் மிகவும் நட்புடன் பழகி வந்தன. அந்த மூன்றும் மூன்று விதமான மீன்கள். ஒன்று முன்னெச்சரிக்கை உள்ள மீன், இன்னொன்று சமயத்திற்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் அறிவு உள்ளது, மூன்றாவது புத்தி குறைவானது.
செம்படவர்களின் வருகை
ஒருநாள் சில செம்படவர்கள் அந்த குட்டைக்கு வந்து பார்த்தனர். அதிலிருந்த ஏகப்பட்ட மீன்களையும் பிடிக்க திட்டம் போட்டனர். குட்டையில் நாலா புறங்களிலும் படிகள் வெட்டி விட்டனர். அவற்றின் மூலம் குட்டையில் இருந்து தண்ணீர் வழிந்து வெளியேறியது. இதனால் நீர் குட்டையில் குறைவதை பார்த்த முதல் வகை முன்னெச்சரிக்கை உள்ள மீன் குட்டையில் நீர் குறைகின்றது. இது ஆபத்து வரப் போவதை காட்டுகிறது. அதற்குள் நாம் எப்படியாவது வேறு நிலைக்கு போய் விடலாம். முன்கூட்டியே வரவிருக்கும் ஆபத்தில் இருந்து தப்பிக்கும் வழியை பார்ப்பவன் அப்புறம் மகிழ்ச்சியுடன் வாழ்வான் என்றது.
அதற்கு பதில் புத்தி மந்தமான மீன் கூறியது. ஆபத்து வருமென நான் நினைக்கவில்லை. அவசரப்பட்டு நெடுநாள் ஒன்றாக வாழ்ந்த இடத்தைவிட்டு ஏன் போக வேண்டும் என்றது. ஆபத்து வரும் சமயத்தில் அதற்கு ஏற்ப ஏதாவது செய்து கொள்ளலாம் என்றது. சமயோசித புத்தியுள்ள முன்னெச்சரிக்கை உள்ள மீன் வெளியேறிய நீருடன் வடிகால் மூலம் போய் வேறு நீர்நிலையில் விழுந்து சௌக்கியமாக வாழத் தொடங்கியது.
செம்படவர் வந்தனர். நீர் நன்கு வடிந்து இருப்பதைப் பார்த்துவிட்டு மீன்களைப் பிடிக்கலாயினர். மந்த புத்தியுள்ள மீன் மாட்டிக்கொண்டது. அதைப் பார்த்த சமயோசித புத்தியுள்ள மீன் தானே பிடிக்கப்பட்ட மீன்களை கோத்த கயிறுகளை கவ்விக்கொண்டு தொங்கியது.
குட்டையிலிருந்து எல்லா மீன்களையும் பிடித்துவிட்டதாக செம்படவர் நினைத்து புறப்பட்டனர். நீர் நிறைய உள்ள இடத்தில் போய் கொட்டி கழுவினர். கயிறு கொண்டு தொங்கிய மீன் எவரும் காணாத சமயத்தில் நீரில் குதித்து ஓடி திரிந்தது.
மந்த புத்தியுடைய மீன் கதி அவ்வளவுதான். முன்னெச்சரிக்கையும் சமயோசிதமாக நடக்கும் புத்தி உள்ள மீன்கள் தப்பித்தன.
கதையின் நீதி
இதனால் சுக வாழ்விற்கு முன்னெச்சரிக்கையும் சமயோசித புத்தியும் அவசியம் என்று உணர்வோம்.
No comments:
Post a Comment